மாலை குவிந்தது

posted in: admire, Education | 2

சென்னை மாநிலக் கல்வித்துறை நூற்று இருபத்தேழு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதன் முதல் நூற்றாண்டு முடியும்போது, முதன் முதலாக, தமிழன் ஒருவனுக்கு – எனக்குப் பொதுக்கல்வி-இயக்குநர் பதவி கிட்டியது. பிறப்பால் தமிழனாக இருப்பதோடு, தமிழ் பேசும் தமிழனாகவும் இருப்பதால், என்னைப் பல ஊர்களுக்கும் அழைத்தனர்.


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அய்ம்பத்து ஆறாம் ஆண்டின் தொடக்கத்தில், தூத்துக்குடி நகர ஆசிரிய மைய ஆண்டு விழாவிற்கு அழைத்தார்கள். அதற்கு முன், இரு பத்தைந்து ஆண்டு காலம் இயக்குநர் யாரும் தூத்துக்குடிக்குச் சென்றதில்லையாம். நான் ஆண்டு விழாவில் கலந்துகொண்டேன்.

அந்நகரில் அப்போது அறுபது தொடக்கப் பள்ளிகள் இருந்தன. அத்தனை பள்ளிகளும் இயக்குநரை, தமிழ் மாலையோடு வந்த பள்ளி ஒன்று கூட இல்லை. அவ்வமயம், என்னுடன் வந்த என் மனைவிக்கும் விழாத் தலைவருக்குமாக்க் குறைந்தது மூன்று மாலைகளையாவது ஒவ்வொரு பளியும் கொண்டு வந்தன. மேலும், பல மாலைகளோடு வந்த பள்ளிகளுக்கும் குறைவில்லை.

மாலைகளுள் பல பெரியன. கடைசியாக ஓர் உயர் தொடக்கப்பள்ளியின் தாள்ளராய் இருந்த தி.மு.க. பிரமுகர் திரு. கே.வி.கே.சாமி, ஆள் உயர கனத்த மாலையை என் கழுத்தில் இட்டு, திக்குமுக்காட வைத்துவிட்டார்.

பலநூறு மாலைகளைக் கண்ட என் மகன், கா.சு. திருவள்ளுவன் மேடையில் இருந்தபடியே,

“அப்பா, மாலை வாங்கிய பணத்தை உங்களிடம் கொடுத்திருந்தால், ஒரு பள்ளிக்கூடமே கட்டியிருப்பீர்கள்” என்றான்.

அவையோர் கொல்லென்று சிரித்தனர. அவன் கருத்துக்குப்புது உருவம் கொடுக முயன்றேன். “பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த தோழர் கே.வி.கே. சாமியே பணத்தை வீணாக்குவதில் இவ்வளவு ஆர்வம் காட்டினா, மற்றவர்களை எப்படித் திருத்துவது? சில மணி நேரங்களில் உதிர்ந்து பயன்றறுப் போய்விடும். இம்மாலையில் இவற்றிற்குச்செலவிட்ட பணத்தைத் திரட்டி, பகல் உணவு அறக்கட்டளை ஏற்படுத்தியிருக்கலாம். சீட்டுப்போட்டு எடுத்து, ஏதாவது ஒரு பள்ளியில் இவ்வாண்டு முழுவதும் ஏழைக் குழந்தைகளுக்குச்சோறு போட்டிருக்கலாம். அது எனது வருகையை நெடுநளைக்கு நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்.

“பின்னர் அமைச்சரோ, பிற பெரியவர்களோ வரும்போது இவ்வழியைப் பின்பற்றலாம். இப்படி வளர்த்தால் பல பள்ளிகளில் சாப்பாடு போடமுடியும்.

“சிற்றூர்களில் உள்ளவர்கள் தானியத்தை அளக்கும்போது என்ன செய்கிறார்கள்?

“முதல் அளவையைச் சாமிக்குக் கொடுக்கிறார்கள். அதைத் தொட வேண்டா.

“இரண்டாம் அளவை ஊர்க்காவலர்க்கு அளிக்கிறார்கள்.ழ அதுவும் தொடரட்டும்.

“மூன்றாவது அளவையைப் பள்ளிக்கூட அன்னதானத்திற்குக் கொடுக்கும் புது முறையைத் தொடங்க வேண்டும். இதனால் குடியானவர் ஏழையாகிவிடப் போவதில்லை.

“பல துளி, பெருவெள்ளம், பல களத்துமேட்டு நன்கொடகளைக கொண்டு, பச்சைக் குழந்தைகளுக்குச்சோறு போட்டு, படிப்பை வளர்க்கலாம். இனியாவது பணத்தை வீணாக்காமல், அப்படிச் செய்யுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தேன்.

கைதட்டல் பலமாய் இருந்தது. பலன் இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை. சில வாரங்கள் கழிந்தன.

2 Responses

  1. M.JEYARAJ

    I congradulate one and all involved in this process to publish the name and fame of such tamil leaders

  2. Saranya

    Nice websites about the leaders of our country. Its so useful to know full life history in the same website in 2 languages. Proud to congrats you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *